முதல்கட்ட விசாரணையில் தகவல்
பாட்னா, அக்.12–
தண்டவாள பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளாததே பீகாரில் ரெயில் தடம் புரள காரணம் என்று, முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து அசாம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ஸ்டேஷன் அருகே தடம் புரண்டது. ரெயிலில் உள்ள 23 பெட்டிகளில் 6 பெட்டிகள் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பராமரிப்பு இல்லாததே காரணம்
இந்நிலையில், ரெயில் தடம் புரண்டதற்கான மூல காரணத்தை கண்டுபிடிப்போம் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், அனைத்து பெட்டிகளும் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தண்டவாளங்களை சரியாக பராமரிக்காததே ரெயில் தடம் புரண்ட விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.