செய்திகள்

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த விரும்புகிறோம்: ராகுல் காந்தி பேச்சு

கரோங், ஜன. 16–

மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சி இருப்பதாகவும், மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த விரும்புவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2 ஆம் கட்ட பயணத்தை மணிப்பூரில் இருந்து மும்பை வரை மேற்கொண்டு வருகிறார்.

ஜனவரி 14-ம் தேதி இந்திய நீதிப் பயணத்தை தொடங்கிய நிலையில், மணிப்பூரின் கரோங் நகருக்கு அவரது பயணம் வந்தது. அங்கு கூடிய மக்கள், ‘ராகுல் காந்தி வாழ்க’ என்றும், ‘எங்களுக்குத் தேவை தனி நிர்வாகம்’ என்றும் முழக்கங்களை எழுப்பினர். அப்போது அவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, “உங்கள் வலிகளை நான் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களை, சொத்துக்களை இழந்திருக்கிறீர்கள். நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்பதையும், மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த விரும்புகிறோம் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ராகுல்காந்தி மீது நம்பிக்கை

இது குறித்து குறிப்பிட்ட காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ‘இங்குள்ள நிலைமையை நாங்கள் அறிந்திருக்கிறோம். அதன் காரணமாகவே அமைதி மற்றம் நல்லிணக்கத்துக்கான செய்தியுடன் ராகுல் காந்தி இங்கே வந்துள்ளார். மெய்தி அல்லது குக்கி என இரண்டு சமூகங்களுமே ராகுல் காந்தி மீது நம்பிக்கை வைத்துள்ளன. இரண்டு சமூகங்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய தலைவராக அவரைப் பார்க்கிறார்கள்’ எனத் தெரிவித்தார்.

மணிப்பூர் மக்களின் மனநிலை குறித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியுடன் குக்கி நிலப்பகுதிக்கு வர வேண்டும் என்று அங்குள்ள அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன. அனைத்துத் தரப்புமே அமைதியையே விரும்புகிறார்கள்’ என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து நாகாலாந்தின் கோஹிமா நகருக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ‘சிறிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என நீங்கள் எண்ணாதீர்கள். சிறிய மாநிலமோ, பெரிய மாநிலமோ அனைவரும் இந்தியர்கள். அனைவருக்கும் சமமான உரிமைகள் உள்ளன. அனைவருக்கும் பொருளாதார நீதி, சமூக நீதி, அரசியல் நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இந்திய நீதிப் பயணத்தின் நோக்கம்’ எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *