செய்திகள்

சென்னை–தூத்துக்குடி இடையே ரெயில் சேவை தொடங்கியது

சென்னை, டிச. 22–

4 நாள்களுக்கு பிறகு சென்னை மற்றும் தூத்துக்குடி இடையே இன்று மீண்டும் ரெயில் சேவை தொடங்கி உள்ளது.

தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிகப் பலத்த மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் ரெயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், இந்தப் பகுதிகளில் தொலை தூர ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சீரான ரெயில் சேவை

தற்போது மழை நின்று வெள்ளம் வடிந்து வரும் நிலையில், இந்தப் பகுதிகளில் ரயில் பாதைகளில் தண்டவாளங்களை விரைந்து சீரமைத்து, ரெயில்களை இயக்க தென்னக ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரெயில் பாதைகளை சீரமைக்க மணல் மூட்டைகள், ஜல்லிக் கற்கள் தேவைப்படுகின்றன. இதற்காக மானாமதுரை ரெயில் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மணலை சாக்குப் பைகளில் நிரப்பும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை-தூத்துக்குடி இடையே 4 நாள்களுக்கு பிறகு இன்று மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது. நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்ட முத்துநகர் விரைவு ரெயில் இன்று காலை 6.15 மணியளவில் தூத்துக்குடி சென்றடைந்தது. ரெயில் சேவை தொடங்கியதை அடுத்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழை பாதிப்புகள் சீர் செய்யப்பட்டதால், தூத்துக்குடி செல்லும் ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *