சென்னை, ஏப். 2–
சென்னையில் இன்று 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் இருந்து வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம், பரிசுப் பொருட்களை கொடுக்கும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளைத் தடுக்கும் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டன. தேர்தல் நடத்தை விதியின்படி தனி நபர் ஒருவர் தன்னுடன் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப்பணம் கொண்டு செல்லக்கூடாது. அப்படி யாராவது கொண்டு சென்றால் அதற்கு தகுந்த ஆதாரங்களை, அதாவது அந்தப் பணம் தன்னுடையதுதான் என்பதற்கான ஆதாரங்களை உடன் வைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் வருமான வரித்துறையினருக்கு பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் ஐந்து இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது சென்னையில் ஏழுகிணறு காவல் எல்லைக்கு உட்பட்ட கொண்டித்தோப்பு சக்கரசெட்டி தெருவில் உள்ள இந்துராம் சௌத்ரி என்பவர் வீட்டிலும், ரைஸ் மில் சாலையில் உள்ள ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதே போன்று ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.