டெல்லி, ஜன. 29–
பீகாரில் அமைந்துள்ள ஐக்கிய ஜனதா தளம்–பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது’ என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
பீகாரின் மெகா கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் செயல்பாடுகள் அதிருப்தியளித்ததால், முதலமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக அணியில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ‘பீகாரில் அமைந்துள்ள ஐக்கிய ஜனதா தளம்–பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது. 2025-ல் பீகார் சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்கிறது. அப்படியென்றால் இப்போது அமைந்துள்ள ஜேடியு–பாஜக கூட்டணி ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான ஆயுளே கொண்டிருக்கும்.
கூட்டணி தாங்காது
இந்தக் கூட்டணி பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும்வரை கூட தாங்காது என்பதை நான் உங்களுக்கு எழுத்துபூர்வமாக கூட தருகிறேன். மக்களவைத் தேர்தல் முடிந்த 6-வது மாதமே அடுத்த மாற்றம் நிகழும். ஏற்கெனவே கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தல் வரை அப்போதைய காங்கிரஸ், ஆர்ஜேடி, ஜேடியு மகா கூட்டணி தாங்காது என்று கூறியிருந்தேன். அது நடந்தது. அதேபோல் இப்போதும் சொல்கிறேன். 2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரை பாஜக–ஜேடியு கூட்டணி தாக்குப்பிடிக்காது’ என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.