காந்தி நகர், டிச. 29–
குஜராத்தில் மருத்துவக் காரணங்களுக்காக மது வாங்க உரிமம் பெற்றுள்ளவா்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 58 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்தகவலை மாநில மதுவிலக்கு மற்றும் கலால் வரித் துறை தெரிவித்துள்ளது.
அத்துறை வெளியிட்ட தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:–
குஜராத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 27,452 பேர் மது உரிமம் வைத்திருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 43,470 ஆக அதிகரித்துவிட்டது. மாநில மக்கள்தொகை சுமார் 6.7 கோடியாக உள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது மது உரிமம் பெற்றுள்ளோர் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.
மருத்துவக் காரணங்களுக்காக மது உரிமம் வழங்கப்படுவது தவிர, வெளிநாட்டவர்கள், வெளிமாநிலத்தவர்கள் குஜராத் வந்தால் அவர்கள் கோரிக்கையின் பேரில் மது உரிமம் அளிக்கப்படுகிறது. ஒரு வாரம் வரை செல்லுபடியாகும் வகையில் இந்த உரிமம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசத் தந்தை மகாத்மா காந்தி மது விலக்கு கொள்கையை தீவிரமாக வலியுறுத்தி வந்தார். அவர் பிறந்த மாநிலம் என்பதால் குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து அங்கு மது உற்பத்தி, விற்பனை, நுகர்வு மற்றும் மதுவை வைத்திருக்கவும் தடை உள்ளது.