செய்திகள்

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்: ரூ.214 கோடி பொருட்கள் பறிமுதல்

ஜெய்ப்பூர், அக். 30–

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.25 கோடி ரொக்கம் உள்பட ரூ.214 கோடி பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஐ.ஜி.விகாஸ் குமார் இங்கு தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் காவல் துறையின் சிறப்பு அதிகாரியாக உள்ளார். இந்நிலையில், தேர்தலையொட்டி, நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் குறித்து விகாஸ் குமார் கூறியதாவது:-

ரூ.214 கோடி பறிமுதல்

ராஜஸ்தானில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு ரூ.25 கோடி ரொக்கம், ரூ.20 கோடி மது, ரூ.20 கோடி நகைகள், ரூ.60 கோடி போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். இது தவிர வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பெட்ரோல், டீசல், உரம் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.214 கோடி ஆகும்.

மேலும் மாநிலம் முழுவதும் 650 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன. இந்த சோதனையில் சட்டவிரோத ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு ஐஜி விகாஸ் குமார் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *