டெல்லி, நவ. 03–
தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கானஅட்டவணை வெளியானதை அடுத்து பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ந் தேதியும், சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ந் தேதியும் தேர்தல் நடையேற உள்ளது. இதுபோன்று, மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர்14 ந் தேதியும், ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 23 ந் தேதியும், தெலுங்கானாவில் 119 தொகுதிகளில் நவம்பர் 30 ந் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அமலாக்கத்துறை சோதனை
அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதனையடுத்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அதன்படி, அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் நடைபெற உள்ள சத்திஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மகாதேவ் என்ற பெயரில் செயலி நடத்தி பணத்தை ஏமாற்றியதாக வந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செயலி மூலம் ஏமாற்றிய பணத்தை அரசியல்வாதிகளுக்கு கொடுத்ததாகவும் ரூ.5 கோடி ரொக்கம் பிடிபட்டதாகவும் சோதனையில் தகவல் வெளியாகியதாக கூறப்படுகிறது. சத்தீஸ்கரில் 2-வது நாளாகவும், ராஜஸ்தானில் இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.