செய்திகள்

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.340 ஆக உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி, பிப்.22-–

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, ரூ.340 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

குறிப்பாக கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதன் மூலம், அக்டோபரில் தொடங்கும் 2024-–25-ம் ஆண்டு பருவத்தில் சர்க்கரை ஆலைகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.340 வீதம் விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்யும்.

மத்திய அரசு, கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.25 உயர்த்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 2024-–25 சர்க்கரைப் பருவத்திக்கு கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு குவிண்டாலுக்கு ரூ.340 என்ற அடிப்படை விகிதத்திற்கு உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’ என்று தெரிவித்தார்.

இதேபோல் விண்வெளித்துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக, இந்த துறையில் அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை தளர்த்தவும் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி செயற்கைக்கோள்கள் உற்பத்தி மற்றும் செயல்பாடு, செயற்கைக்கோள் தரவு தயாரிப்புகள் மற்றும் தரை மற்றும் பயனர் பிரிவுகளில் தானியங்கி வழியின் கீழ் 74 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அரசாங்கம் அனுமதித்துள்ளது.

அதற்கு மேற்பட்ட அளவுக்கு மட்டுமே அரசின் அனுமதி தேவைப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *