செய்திகள்

‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும்’: மத்திய அரசின் உயர்நிலைக்குழுவுக்கு தி.மு.க. கடிதம்

சென்னை, ஜன.18-–

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர்நிலை குழுவுக்கு தி.மு.க. கடிதம் அனுப்பி உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உயர்நிலை குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக்குழுவுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவித்து தி.மு..க. கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்துக்கு ஏற்கனவே தி.மு.க. தனது கருத்துகளை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது.

2022-ம் ஆண்டு சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்துவது சம்பந்தமாக தான் ஆலோசனைகளை கோரியது. ஆனால், தற்போது மத்திய அரசு இதை விரிவுபடுத்தி நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றோடு நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஆய்வு வரம்புகளை வெளியிட்டுள்ளது.

இந்த செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழு சட்டவிரோதமானது. அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. மாநில அரசின் பட்டியலில் உள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் தேர்தல் நடைமுறை பற்றி விசாரிக்க உயர்நிலைக்குழுவிற்கு அதிகாரமில்லை.

ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம். எனவே இந்த நடைமுறையை தி.மு.க. எதிர்க்கிறது.

ஒரே நேரத்தில் தேர்தலை திணிப்பதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது மாநில உரிமை மற்றும் அதிகாரத்தை பறிப்பதாகும்.

இதுபோன்ற காரணங்களால் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நடைமுறையை தி.மு.க. மிக கடுமையாக எதிர்க்கிறது.

ஆகவே, இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் தி.மு.க. சட்டத்தின் வழி கொண்டு பொருத்தமான நடவடிக்கையை எடுக்க தள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *