புவனேஸ்வர், ஜன. 11–
ஒடிசாவின் சிவப்பு எறும்பு சட்னிக்கு ஒன்றிய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அதிகளவு காணப்படும் சிவப்பு எறும்புகள் மரங்களின் இலைகளில் கூடு கட்டி வாழும் தன்மை கொண்டவை. அப்பகுதியினர் இந்த சிவப்பு எறும்புகளை பிடித்து சட்னி செய்து சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
புவிசார் குறியீடு வழங்கல்
இந்நிலையில், இந்த சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு கேட்டு ஒடிசா அரசு சார்பில் புவிசார் குறியீடுக்கு (Geographical indication) விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இதனை பரிசீலித்த அமைப்பு, புவிசார் குறியீடு அளித்துள்ளது.
இந்நிலையில், சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதை அடுத்து, இந்த சட்னியின் தரத்தை உறுதிப்படுத்தி உலகளவில் எடுத்துச் செல்ல முடியும் என அம்மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புவிசார் குறியீடு என்பது, ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த நகரம், வட்டாரம், நாடு போன்ற இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்புக்கான சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.