ஐதராபாத், பிப். 22–
ஆந்திராவைச் சேர்ந்த நான்கு மாத குழந்தை நாம் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத சாதனையை செய்து உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
உலகில் எத்தனையோ நபர்கள் தினம் தினம் பல வகையான சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறனர். அப்படி, ஆந்திராவைச் சேர்ந்த நான்கு மாத குழந்தை நாம் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத சாதனையை செய்து உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. காய்கறிகள், விலங்குகள், பறவைகள் என 120-க்கும் மேற்பட்ட வித்தியாசமான பொருட்களை சரியாக அடையாளம் கண்டுகொண்டு நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது இந்த அதிசய குழந்தை.
உலக சாதனைக் குழந்தை
இந்தக் குழந்தையின் பெயர் காய்வல்யா. தனது குழந்தையின் திறமை ஒவ்வொன்றையும் வீடியோவாக பதிவு செய்து அதை நோபல் உலக சாதனைப் பதிவு (Noble World Records) கமிட்டிக்கு தாய் ஹேமா அனுப்பியிருக்கிறார். காய்வல்யாவின் திறமையை கவனமாக மதிப்பாய்வு செய்த நோபில் உலக சாதனைக் குழுவினர், குழந்தையின் அபாரமான ஞாபக சக்தி மற்றும் அடையாளம் கண்டுகொள்ளும் திறனை பாராட்டி சான்றிதழையும் வழங்கியுள்ளனர்.
ஃப்ளாஷ்கார்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட படங்களை வெறும் நான்கு மாத குழந்தை சரியாக கண்டுபிடிப்பது இதுவே முதல்முறை என காய்வல்யாவிற்கு உலக சாதனை அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது இந்தச் சிறுமி புகைப்படத்தை பார்த்து அடையாளம் காணும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தை முன் வைக்கப்பட்டுள்ள 120 ஃப்ளாஷ்கார்டுகளில் 12 பூக்கள், 27 காய்கறிகள், 27 பழங்கள், 27 விலங்குகள், 27 பறவைகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் அழகாக கண்டுபிடித்து அசத்துகிறது இந்த பச்சிளம் குழந்தை.