லண்டன், ஏப். 13–
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்போம் என ஈரான் அறிவித்திருந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று சர்வதேச நாடுகள் அறிவுறுத்தியுள்ளது.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து, கடந்த வாரத்தில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரானின் புரட்சி காவல்படையின் இரண்டு தளபதிகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இரண்டு இராணுவ வீரர்கள் உட்பட 7 பாதுகாப்பு படை உறுப்பினர்களைக் கொன்றது, மத்திய கிழக்கில் வன்முறையை அதிகரிக்கும் என்ற அச்சத்திற்கு வழிவகுத்துள்ளது. அதன் எதிரொலியாக, சிரியா தலைநகரில் ஈரானுக்கு எதிராக நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று ஈரான் கூறியுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுத்தல்
இந்நிலையில், ஈரானில் இருந்து இஸ்ரேல் பகுதி மீது தாக்குதல் நடத்தும் சாத்தியம் காரணமாக, இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளுக்கு அத்தியாவசியப் பயணங்கள் தவிர ஏனைய அனைத்தையும் தவிர்க்கவும்” என பிரிட்டன் தனது குடிமக்களிடம் கூறியுள்ளது. மேலும், பாலஸ்தீனிய-இஸ்ரேல் மோதல் சூழலில், லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ‘ப்ளூ லைன்’ பகுதியிலும் நிலைமை மோசமடைந்து உள்ளது” என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையை” கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் இரு நாடுகளுக்கும் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. இரண்டு நாடுகளிலும் இருக்கும் இந்திய குடிமக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர்களின் நடமாட்டத்தை குறைந்தபட்சமாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.