திருவனந்தபுரம், டிச. 12–
கேரளாவில் தனது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எஃப்.ஐ மாணவர்களை, ‘கிரிமினல்ஸ்’ என்று அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் குறிப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அந்த மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் சிலர், அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆளுநர், காரில் இருந்து கீழே இறங்கி ஆவேசமாக பேசினார்.
கிரிமினல்ஸ் என காட்டம்
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை ‘கிரிமினல்ஸ்’ என்று குறிப்பிட்டு, வந்து பாருங்கள் என்று கத்தினார். கேரள மாநில அரசு தனக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும் ஆரிஃப் கான் குற்றம்சாட்டினார்.
‘இது முதலமைச்சரின் சதி. எனக்கு உடல்ரீதியாக காயம் ஏற்படுத்த முதலமைச்சர் பினராயி விஜயன் ஆட்களை அனுப்புகிறார். அரசியலமைப்பு சீர்குலைவது போல் தெரிகிறது. அரசியலமைப்பு இயந்திரத்தின் சீர்குலைவை அனுமதிக்க முடியாது’ என்று தெரிவித்தார். ஆளுநரின் காரை வழிமறித்து மாணவர்கள் போராடியது பரபரப்பை ஏற்படுத்தியது.