ரஷ்யா, சீனா, இந்தியாவுக்கு 2, 3, 4 வது இடம்
வாஷிங்டன், ஜன. 17–
சர்வதேச அளவில் எந்த நாட்டின் ராணுவம் பலமாக உள்ளது, எந்த ராணுவம் பலவீனமாக இருக்கிறது என்பது குறித்த பட்டியலை குளோபல் ஃபயர்பவர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் பாதுகாப்புத் தகவல்களைக் கண்காணிக்கும் இணைய தளமான குளோபல் ஃபயர்பவர் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் வலிமையான ராணுவம் கொண்ட நாடு மற்றும் பலவீனமான ராணுவத்தைக் கொண்டுள்ள நாடு குறித்த பட்டியலை வெளியிடுவது வழக்கம்.
வீரர்கள் எண்ணிக்கை, ராணுவ உபகரணங்கள், நிதி, புவியியல் இருப்பிடம் மற்றும் வளங்கள் என மொத்தம் 60க்கும் மேற்பட்ட காரணங்களை அடிப்படையாக வைத்து இந்த 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஃபயர்பவர் பட்டியலை உருவாக்கியுள்ளனர். இந்தப் படியலில் மொத்தம் 145 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த 60 காரணங்களையும் வைத்துக் கணக்கிட்டே பவர் இண்டெக்ஸ் மதிப்பீட்டை நிர்ணயம் செய்கிறார்கள். இதில் மார்க் குறைவாக வாங்கி இருந்தால் வலுவான ராணுவம் என்று அர்த்தமாகும்.
இந்தியாவுக்கு 4 வது இடம்
அதன்படி இந்தாண்டிற்கான பட்டியலை குளோபல் ஃபயர்பவர் அமைப்பு அண்மையில் வெளியிட்டது. அதன்படி சர்வதேச அளவில் அதிக சக்திவாய்ந்த ராணுவமாக அமெரிக்கா இருக்கிறது. அதைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் சீனா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 4 வது இடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து தென்கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், துருக்கி ஆகிய நாடுகள் 5 முதல் 7 வரையிலான இடங்களில் உள்ளன. பாகிஸ்தான், துருக்கி நாடுகளும் டாப் 10 இடத்தில் வந்துள்ளன.
அதேபோல பலவீனமான நாடுகள் லிஸ்டில் பூட்டான் முதலிடத்தில் உள்ள நிலையில், மால்டோவா, சுரினாம், நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சோமாலியா, பெனின் லைபீரியா, பெலிஸ் நாடுகள் 4 முதல் 7 வரையிலான இடங்களில் உள்ளன. சியரா லியோன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, ஐஸ்லாந்து நாடுகள் பலவீனமான ராணுவம் லிஸ்டில் இருக்கிறது.
இது குறித்து குளோபல் ஃபயர்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் தனித்துவமான முறையை வைத்து நாங்கள் இதைக் கணக்கிடுகிறோம். இதன் மூலம் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடுகள், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் என அனைத்தையும் எங்களால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. ஆண்டுதோறும் இந்தப் பட்டியலை வெளியிடும் நிலையில், இந்தாண்டிற்கான பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளோம் என்று கூறியுள்ளது.