புதுடெல்லி, ஜன. 11–
நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கக் கூட காங்கிரசுக்கு தகுதி இல்லை என்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ என்கிற பெயரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி யாத்திரை நடத்தவுள்ளார். வருகிற ஜனவரி 14 முதல் மார்ச் 20 வரை இந்த யாத்திரை நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. வரும் 2024 மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தியின் பாரத ஜோடோ நியாய யாத்திரை தேசிய அரசியலில் மிகவும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அசாமில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குவஹாட்டியில் பாரதீய ஜனதா மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, “காங்கிரஸ் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’யைத் தொடங்குவதற்கு வடகிழக்கை தேர்ந்தெடுத்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு இது ’பாரத் டோடோ அநியாய யாத்திரை’ போல் தெரிகிறது.
அநீதிக்கு அடித்தளமிட்டு இந்தியாவை உடைத்த காங்கிரஸ், இப்போது பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொள்வது விந்தையானது. காங்கிரஸ் அரசாங்கத்தை நடத்துவதற்கு தகுதியற்றது. அதேவேளையில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூட தகுதியற்றது என நினைக்கிறேன். ‘இந்தியா’ கூட்டணிக்கு இரண்டு இலக்குகள் உள்ளன. தங்களது சொத்துக்களையும், தங்களது கட்சி தலைவர்களின் குடும்பங்களையும் பாதுகாக்கவே இந்தியா கூட்டணியை அமைத்துள்ளனர். 2024 பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதா மற்றொரு வெற்றியை உறுதிசெய்ய கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.