செய்திகள்

செஸ் தரவரிசையில் இந்தியா முதலிடம்: உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

ஹாக், ஜன.17–

நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இந்திய தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார்.

இந்தியாவில் செஸ் போட்டிகள் என்றாலே தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவார். செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அவர் பல ஆண்டுகளாக இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்ததாக நாடு முழுவதும் பல வீரர்கள் செஸ்சில் வென்றாலும், விஸ்வநாதன் ஆனந்த்தை நெருங்க முடியவில்லை. கடந்தாண்டு 17 வயதான செஸ் வீரர் குகேஷ் முதலிடத்திற்கு வந்தாலும், நீடிக்கவில்லை.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கவனிக்கப்படும் வீரராக முன்னேறி வரும் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றதோடு, பல சரித்திரமும் படைத்துள்ளார். 2023ம் ஆண்டில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டிய உலகின் இளைய செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதி போட்டியை எட்டிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

இந்த நிலையில், நெதர்லாந்தில் நடந்துவரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை எதிர்கொண்டார். இப்போட்டியில் டிங் லிரனை வீழ்த்திய பிரக்ஞானந்தா, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதுமட்டுமல்லாமல், இப்போட்டியில் வென்றதன் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதன்முறையாக முதலிடத்தை பிடித்து அசத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *