செய்திகள்

ஈரோட்டில் தனியார் கல்லூரி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒரு மாணவி பலி; 40 பேர் காயம்

ஈரோடு, ஜன. 29–

ஈரோடு அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவி உயிரிழந்தார். படுகாயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு அடுத்த வேப்பம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர்கள் 50க்கும் மேற்பட்டோர், கர்நாடகாவிற்கு கல்விச் சுற்றுலா செல்வதற்காக, கல்லூரியின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் பேருந்தில் புறப்பட்டனர்.

மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் அதில் பயணித்த நிலையில், அந்த சுற்றுலா பேருந்து 500 மீட்டர் சென்றதும் அங்கிருந்த வளைவில் திரும்ப முயற்சித்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் ஸ்வேதா என்ற மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனை மற்றும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசை ஆசையாக சுற்றுலாவிற்கு கிளம்பிய கல்லூரி மாணவிகளுக்கு நடந்த இந்த சம்பவம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *