செய்திகள்

ஈரோட்டில் கர்ப்பிணி மர்ம மரணம்: போதையில் கணவன் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் போராட்டம்

ஈரோடு, ஏப். 30–

ஈரோடு அருகே கர்ப்பிணி மனைவியை குடிபோதையில் தாக்கிக் கொன்றதாக, கணவனுக்கு எதிராக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவன்னா என்பவரின் மகன் ரமேஷ் (வயது 28). கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த புட்டுசித்தம்மா மகள் ஆஷா (வயது 23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகள் முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ஆஷா, 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், ரமேஷ் மது குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் மனைவி ஆஷாவுடன் சண்டை போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல், மது குடித்துவிட்டு வந்த ரமேஷ், தனது மனைவி ஆஷாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரமேஷ், தன் கர்ப்பிணி மனைவி ஆஷாவை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

கர்ப்பிணி மரணம்

அதன் பின் ரமேஷ் வெளியே சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் ஆஷா வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ஆஷா மயக்கமடைந்து கீழே கிடந்துள்ளார். இதனையடுத்து ஆஷாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆஷாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது உடலை தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மனைவி இறந்த தகவல் கேட்டு கணவர் ரமேஷ் தலைமறைவான நிலையில், அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனாதால் வருவாய் கோட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை நடத்த உள்ளனர்.

இதைத் தொடர்ந்து கர்ப்பிணியை தாக்கி கொன்றதாக அவரது கணவரை கைது செய்ய வேண்டும் என ஆஷாவின் உறவினர்கள் தாளவாடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார், கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *