மும்பை, அக்.9–
இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக நேற்றைய வர்த்தகத்தில், 3 வருடத்தில் இல்லாத சரிவை இஸ்ரேல் பங்குச்சந்தை எதிர்கொண்டது.
இந்த நிலையில், திங்கட்கிழமையான இன்று காலை வர்த்தகம் துவங்கிய உடன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகள் வரை சரிந்து மிகவும் மோசமான அளவான 65,681.52 புள்ளிகளாக உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று ஐடி சேவை துறை பங்குகள் அனைத்தும் உயர்வுடன் உள்ளது. காரணம் இந்த வாரத்தில் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது, இதை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்கள்.
ஐடி பங்குகளை தாண்டி இந்துஸ்தான் யூனிலீவர், சன் பார்மா, மாருதி சுசூகி ஆகியவை மட்டுமே உயர்வுடன் உள்ளது. மற்ற அனைத்து நிறுவனங்களும் சரிவுடன் உள்ளது. இதில் அதிகப்படியாக பஜாஜ் பைனான்ஸ், எல் அன்ட் டி, பஜாஜ் பின்சர்வ், டாடா ஸ்டீல், பவர் கிரிட், எஸ்பிஐ, ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் ஆகியவை 1 சதவீத்திற்கு மேல் சரிந்துள்ளது.
இதேபோல் நிப்டி குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 19,480.50 புள்ளிகள் வரை சரிந்து 19557 என்ற முக்கிய பென்ச்மார்க் அளவீட்டை இழந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
மேலும் நிப்டி மிட்கேப், ஸ்மால் கேப், லார்ஜ் கேப் ஆகிய அனைத்தும் சரிவை சந்தித்ததுள்ளது. இதுவே துறை வாரியாக பார்க்கும்போது நிப்டி ஐடி,ஹெல்த்கேர், பார்மா ஆகிய 3 துறை சார்ந்த குறியீடுகள் மட்டுமே உயர்வுடன் உள்ளது. மற்ற அனைத்தும் பெரும் சரிவை சந்தித்துள்ளன.