செய்திகள்

இன்சாட்-3 டி.எஸ். செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்.-14 ராக்கெட் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படுகிறது

சென்னை, ஜன.29-–

‘வானிலை முன்அறிவிப்புகளை தெரிந்து கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட ‘இன்சாட்-3 டி.எஸ்.’ செயற்கைகோளை சுமந்து கொண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதற்காக ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-14’ ராக்கெட் தயார் நிலையில் உள்ளது’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத், 2024-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 12 ஏவுதல்களை இலக்காக கொண்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி, கடந்த 1-ந் தேதி காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில், 469 கிலோ எடை கொண்ட எக்ஸ்ரே போலரிமீட்டர் செயற்கைகோளை (எக்ஸ்போசாட்) பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்திலான துருவமுனைப் பணியை வெற்றிகரமாக ஏவி இஸ்ரோ புத்தாண்டை சிறப்பாக தொடங்கியது.

தொடர்ந்து, வானிலை முன்அறிவிப்பு தகவல்கள் அடங்கிய காலநிலை தரவுகளை அறிந்து கொள்வதற்காக ‘இன்சாட்-3டிஎஸ்’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ பெங்களூருவில் வடிவமைத்து உள்ளது. இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தயார்நிலையில் உள்ள ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் பொருத்தி, அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது.

காலநிலை தரவுகளை தெரிந்து கொள்வதற்காக தற்போதுள்ள சுற்றுப்பாதையில் இன்சாட்-3டி மற்றும் 3 டி.ஆர். செயற்கைகோள்கள் சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இன்சாட் அமைப்பின் திறன்களை கணிசமாக மேம்படுத்துவதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட ஒரு பிரத்யேக வானிலை செயற்கைகோள் இன்சாட்-3 டி.எஸ். செயற்கைகோளாகும்.

இன்சாட்-3 டி.எஸ். செயற்கைகோள் மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகளை வழங்குவதுடன் வானிலை முன் அறிவிப்பு திறன்களை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த செயற்கைகோளில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக 6 சேனல் இமேஜர் மற்றும் 19 சேனல் சவுண்டர் கருவிகள் வானிலை ஆய்வுகளுக்காகவும், உயர்தர தரவுகளை சேகரிப்பதற்காகவும் அனுப்பப்படுகிறது.

அத்துடன் இந்த செயற்கைகோள், ‘டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர்’ (டி.ஆர்.டி) போன்ற அத்தியாவசிய தகவல் தொடர்பு கருவிகளையும் கொண்டுள்ளது. இந்த கருவி தானியங்கி தரவு சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து தரவுகளையும் பெறுகிறது. இன்சாட் 3 டி.எஸ். செயற்கைகோளில் தகவல் தொடர்பு அம்சங்களுடன், நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

இதுதவிர பேரழிவு எச்சரிக்கை அமைப்புகளுக்கான தரவுகளை வழங்குவதுடன், முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *