செய்திகள்

திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது: முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை, ஜன. 16–

திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் திருவள்ளுவர் பிறந்த நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் நாளில் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, காவி உடையுடன் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து, “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதீய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.

அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

காவி உடையுடன் திருவள்ளுவரின் படத்தை பகிர்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு பெரும் சர்ச்சையான நிலையில், அதற்கு கண்டனம் வலுத்து வருகிறது.

ஸ்டாலின் வாழ்த்து

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:–

“தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

133 அடியில் சிலையும் – தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில், வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *