செய்திகள்

என் தாய் சோனியா காந்தியின் தாலி நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டது

மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி

பெங்களூரு, ஏப். 24–

காங்கிரஸ் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி அநாகரீகமாக விமர்சித்த நிலையில், நாட்டுக்காக தாலியை தியாகம் செய்தவர் எனது தாய் சோனியா காந்தி என்று, காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதிலளித்துள்ளார்.

கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் 26 ந்தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனிடையே வேட்பாளர்கள் புயலாய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடி இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள். நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை அவர்களுக்கு கொடுக்க விரும்புகிறீர்களா? இதை நீங்கள் ஏற்பீர்களா? எனது தாய் மற்றும் சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை” என்று பேசியிருந்தார்.

தாலி பற்றி மோடிக்கு புரியாது

இந்நிலையில், பெங்களூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:–

“இரண்டு நாட்களுக்கு முன்பு உங்கள் தாலியை காங்கிரஸ் பறித்துவிடும் என்று பேச்சு வந்தது. இந்த நாடு கடந்த 75 ஆண்டுகளாக சுதந்திரமாக உள்ளது. 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. உங்கள் தங்கத்தையோ அல்லது தாலியையோ காங்கிரஸ் பறித்ததா? போர் நடந்தபோது எனது பாட்டி ​​இந்திரா காந்தி தனது தாலியையும், தங்கத்தையும் நன்கொடையாக அளித்தார். என் தாய் சோனியாகாந்தியின் தாலி இந்த நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டது.

இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் தாலியை தியாகம் செய்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய தாலியை அடமானம் வைக்க நேரிட்ட போது, ​​பிரதமர் எங்கே இருந்தார்? மணிப்பூர் பெண்களின் தாலி குறித்து கவலைப்பட்டாரா? விவசாயிகள் 600 பேர் தற்கொலை செய்து கொண்டபோது, ​அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பற்றி அவர் நினைத்தாரா? இன்று பெண்களை ஓட்டுக்காக பயமுறுத்துகிறீர்களா? நரேந்திர மோடி தாலியின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டிருந்தால், அவர் இதுபோன்ற நெறிமுறையற்ற விஷயங்களைப் பேசியிருக்க மாட்டார்”. இவ்வாறு பிரியங்கா காந்தி காட்டமாக கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *