டெல்லி, மார்ச் 30–
இந்தியாவில் புதிதாக 121 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 800 ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 118 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,34,293 ஆக உயர்ந்துள்ளது.
4 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 800 ஆக உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 3 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் 31 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒருவர் என இந்தியாவில் மொத்தம் 4 பேர் உயிரிழந்த நிலையில், நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,33,551 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 114 பேர் வீடு திரும்பிய நிலையில், இதுவரை மொத்தம் 4,44,99,906 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.68 கோடி டோஸ் தடுப்பூசிக் செலுத்தப்பட்டுள்ளன என்று இந்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.