புதுடெல்லி, ஏப்.29-
2-வது கட்ட வாக்குப்பதிவும் பா.ஜனதாவை கைவிட்டதால் விரக்தியில் இருக்கும் பிரதமர் மோடி, அச்சத்தை தூண்டுகிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
2-வது கட்ட தேர்தலும் பா.ஜனதாவை கைவிட்டு விட்டது. அதனால் விரக்தி அடைந்துள்ள பிரதமர் மோடி, கர்நாடகாவில் பிரசாரத்துக்கு செல்கிறார். பொய் சொல்லுவது, அச்சத்தை தூண்டுவது ஆகிய காரியங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். அதை தவிர்த்து, கீழ்கண்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.
நாடாளுமன்ற ஆய்வறிக்கை யின்படி, கர்நாடகத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றவில்லை. நாடாளுமன்ற வருகையின் தேசிய சராசரி 79 சதவீதம். ஆனால், கர்நாடகாவை சேர்ந்த 28 எம்.பி.க்களின் சராசரி வருகை 71 சதவீதமாக இருந்தது. அவர்களில் 26 பேர், கர்நாடக பிரச்சினைகளை எழுப்பியதே இல்லை.
5 ஆண்டுகளில், 3 எம்.பி.க்கள் ஒரு கேள்வி கூட கேட்டது இல்லை. 5 எம்.பி.க்கள் ஒரு விவாதத்தில் கூட பங்கேற்றது இல்லை. 14 எம்.பி.க்கள், தங்கள் தொகுதியில் வகுப்பு கலவரத்தை தூண்டுவதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டு இருந்ததாக தெரிய வந்துள்ளது.
இத்தகைய திறமையற்ற எம்.பி.க்களை திணித்ததற்காக கர்நாடக மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்பாரா?
கர்நாடகாவில் கடுமையான வறட்சி நிலவுகிறது. பேரிடர் நிவாரண விதிமுறைகளின்படி, கர்நாடக அரசு கடந்த செப்டம்பர் மாதம் ரூ.18 ஆயிரம் கோடி நிதி கேட்டது. மத்திய குழு பார்வையிட்ட ஒரு மாதத்துக்குள் நிதி வழங்கவேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், 7 மாதங்கள் கழித்து, அதுவும் ரூ.3 ஆயிரத்து 498 கோடி மட்டும் அனுமதித்துள்ளது. இது, கர்நாடக அரசு கேட்ட நிதியில் வெறும் 20 சதவீதத்துக்கும் குறைவு ஆகும். ஏன், கர்நாடக மக்களிடம் பிரதமர் மோடி பாரபட்சமாக நடந்து கொள்கிறார்?.
கர்நாடக மக்கள் மீது ஏன் பழிவாங்கும் உணர்வுடன் இருக்கிறார்? அவர் தனது மவுனத்தை கலைத்து பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.