இலங்கை அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொழும்பு, அக். 24–
இந்தியர்கள் 2025 மார்ச் 31 ந்தேதி வரையில் இலங்கை செல்ல இலவச விசாக்கள் வழங்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலவச விசாக்களை 2025 மார்ச் 31 ஆம் தேதி வரை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது ஒரு முன்னோடித் திட்டமாக இருக்கும் என்றும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மார்ச் மாதம், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இந்தியாவுடனான தனது நாட்டின் உறவு ‘எங்கள் வெளியுறவுக் கொள்கையில் மிக முக்கியமான ஒன்றாகும்’ என்று கூறி இருந்தார்.
மேலும் பொருளாதார மீட்சியை அதிகரிக்க புதுடெல்லியுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தனது அரசாங்கத்தின் திட்டங்களை எடுத்துரைத்த அவர், நாங்கள் ஒருங்கிணைத்து, இலங்கையில் இந்திய நாணயத்தை வர்த்தகம் செய்யக்கூடிய நாணயமாக அனுமதிக்க விரும்புகிறோம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.