ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு வாக்குறுதி
ஐதராபாத், ஏப். 12–
ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சி அமைத்தால், 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் மே 13-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:– பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடி உயிர் துறந்தவர் மகாத்மா ஜோதிராவ் பூலே. அவரின் 197-வது ஜெயந்தி விழாவையொட்டி, அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
மாதந்தோறும் ரூ.4000
ஜோதிராவ் பூலேவின் கனவுகள் நனவாக, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்ததும், பிற்படுத்தப்பட்டோரின் நலன்களைக் காக்க, பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவோம். 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.4,000 உதவித் தொகை வழங்கப்படும்.
ரூ.1.50 லட்சம் கோடியில் பிற்படுத்தபட்டோருக்கான சப்-பிளான் திட்டம் அமல்படுத்தப்படும். சொந்த தொழில் புரிய 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். பிற்படுத்தப்பட்டோருக்கு நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.