காந்திநகர், நவ. 27–
குஜராத் மாநிலத்தில் இடி, மின்னல் தாக்கி 20 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் தற்போது மழை காலம் கிடையாது. இருந்த போதிலும் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று எதிர்பாராத வகையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெள்ள பெருக்கும் ஏற்பட்டது. இடியுடன் கூடிய கனமழையால் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமாகின. இடி, மின்னல் தாக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத்தில் உள்ள 252 தாலுக்காவில் 234 தாலுக்காவில் மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் 5 செ.மீ. முதல் 11 செ.மீ. வரை மழை பெய்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
“மின்னல் தாக்கி பலர் உயிரிழந்த செய்தி கேட்டு கவலையடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளூர் அதிகாரிகள் நிவாரணப் பணிக்காக முடுக்கிவிடப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
தெற்கு குஜராத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் இன்றும் கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வடகிழக்கு
அரபி கடலில் சூறாவளிக்கான சுழற்சி மையம் கொண்டுள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறது.