ஆதித்யா விண்கலம் ஜனவரி 6–ந்தேதி மாலை 4 – 4.30 மணிக்கு எல்–1 புள்ளியை அடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
சூரியனை ஆய்வு செய்ய, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2–ந்தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இது பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. துாரம் 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள, ‘எல்–1′ எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
சமீபத்தில் ஆதித்யா எல் 1 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த ‘சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப்’ வாயிலாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படங்களை, இஸ்ரோ வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், ‛‛ஆதித்யா எல்–1 அதன் இறுதி கட்டத்தின் துவக்க புள்ளியில் இருக்கிறது. ஆதித்யா விண்கலம் ஜனவரி 6–ந்தேதி மாலை 4 முதல் 4.30 மணிக்குள் எல்1 புள்ளியை அடையும்” என்றார்.