புதுடெல்லி, பிப்.4–
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரங்கள் பற்றி ‘இந்தியா: தி மோடி குவெஸ்டீன்’ என்ற பெயரில் பிபிசி ஆவணப்படம் தயாரித்தது. இந்த படம் குறித்த வீடியோ இணைப்புகள் யூ ட்யூப் மற்றும் டுவிட்டர் போன்றவற்றில் பகிரப்பட்டன. இவற்றை தடை செய்யும்படி மத்திய அரசு கடந்த மாதம் 21-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களில், ‘‘பிபிசி ஆவணப்படத்தில் உண்மை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க இவற்றை பயன்படுத்த முடியும். எனவே, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல்களை தடை செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எம்எம் சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தின் லிங்க்குகளை நீக்க எடுக்கப்பட்ட முடிவில் அசல் ஆவணத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். பதில் மனுவை 3 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனுக்கள் மீதான அடுத்த விசாரணை ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.