தெக்ரான், ஏப். 24–
ஈரான் ஆதரிக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு மீது இன்று காலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை அழிப்பதாக கூறிய இஸ்ரேல், காசா மீது தாக்குதலை தொடர்ந்தது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 6 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த கோரி பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், இஸ்ரேல் போர் முடிவை கைவிட மறுக்கிறது.
இதற்கிடையே, ஈரான் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியது. இதில் ஈரானின் உயர் அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லா அமைப்பை தாக்கத்தான் நாங்கள் நினைத்தோம், ஈரானை தாக்க எண்ணவில்லை என்று இஸ்ரேல் கூறியும் ஈரான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
2 பேர் பலி
இதனால் ஈரான்- இஸ்ரேல் போரும் தொடங்கியது. இதனையடுத்து இருவரும் மாறி மாறி பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பு 12க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல், இன்று காலை லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மீது தாக்குதல் நடத்தியது. எல்லையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள அபு அல் அஸ்வாத் என்ற கடலோர பகுதியில்தான், பல டிரோன்களை ஏவி வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது இஸ்ரேல்.
இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் வான் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இன்ஜினியர் உட்பட 2 பேர் இறந்துள்ளனர். தங்கள் தரப்பிலிருந்து 2 பேர் இறந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது. இதுவரை நடந்த இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் 378 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில் பலரும் ஹிஸ்புல்லா அமைப்பினரைச் சேர்ந்தவர்கள். இதில் பொதுமக்கள் 70 பேரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.