தன் குறும்படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுப்பதற்கு நல்ல ‘குரல்வளம் உள்ள அவளைத்’ தேடிக் கொண்டிருந்தான் ராஜா.
அவன் எத்தனையோ குரலைக் கேட்டும் எந்தக் குரலும் அவனுக்கு சரியாக அமையவில்லை. எந்தக் குரலும் திருப்தி அமையாததால், தன் பணிகளை நிறுத்தி வைத்தான் ராஜா. மறுபடியும் மறுபடியும் ஒரு நல்ல குரலைத் தேடினான்.
அப்போதுதான் ராஜாவின் ஞாபகத்தில் சசிகலா வந்து நின்றாள்.
சசிகலாவிற்கு நல்ல குரல் வளம். ஏன் சசிகலா தன் நினைவில் வரவில்லை. ஆசுவாசப்படுத்திய ராஜா உடனே சசிகலாவுக்கு போன் செய்தான்.
சார் சொல்லுங்க என்று ரொம்பவே ஆர்வமாக பேசினாள்.
சசி ஒரு சின்ன குறும்படம். நீங்க வாய்ஸ் ஓவர் கொடுக்கணும். வரமுடியுமா ? என்று ராஜா கேட்க
என்ன சார் இப்படி சொல்றீங்க? வேலையே அதுதானே. நான் கண்டிப்பா வர்றேன். எந்த இடம் அப்படிங்கறத கூகுள் மேப் அனுப்புங்க என்று சசிகலா சொன்னாள்
சசி என்று இழுத்தான் ராஜா
சொல்லுங்க ராஜா என்ன ஆச்சு ?
இல்ல இந்த குறும்படம் ஒரு சாரிட்டபிள் டிரஸ்ட் பண்றது. பணம் அவ்வளவு தரமுடியாது என்று ராஜா சொன்னான்.
என்ன சார். நீங்க சொல்லிட்டீங்க நான் செய்கிறேன். பணம் எனக்கு முக்கியம் இல்ல. நான் வர்றேன் சார். நீங்க எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை கொடுங்க என்று ரொம்பவே பெருமிதமாக சொன்னாள்.
நான் உங்களுக்கு மேப் அனுப்புறேன் என்று சொல்லிய ராஜா சசிகலாவிற்கு கூகுள் மேப் அனுப்பினான்.
இரண்டு நிமிடம் ஓடக்கூடிய அந்த குடும்பத்திற்கு சசிகலாவின் குரல் ரொம்பவே பொருந்துகிறது. நவீன குளிரூட்டப்பட்ட அந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் சசிகலா பேசியபோது எடுத்துவைத்து அந்தப் படத்திற்கும் சசிகலாவின் குரலும் இரண்டும் ஒத்துப் போனது. பட தயாரிப்பாளரும் இந்த குரல் ரொம்பவே நன்றாக இருப்பதாகச் சொன்னார் .
பேசி முடித்த சசிகலா
சரி ராஜா வாரேன் என்று சொல்லிவிட்டு நகர
சசிகலாவின் கூகுள் நம்பரைகெட்டு சசிகலாவின் கணக்கில் ஒரு கணிசமான தொகையை தயாரிப்பாளரிடம் கொடுக்கச் சொன்னான் ராஜா.
அதுவரையில், இவ்வளவு தொகையை எதிர்பார்க்காத சசிகலா அவள் வங்கிக்கணக்கில் பணம் வந்ததும் அவளின் முகம் ஆகாயத்தை விட அகலமாக விரிந்தது.
ரொம்ப நன்றி…. ரொம்ப நன்றி ….என்று சொல்லி வீட்டுக்கு சென்றாள்.
வீட்டுக்கு போனதும் ஓராயிரம் முறை நன்றி சொல்லி இருப்பாள்.
நான் இவ்வளவு பணத்தை எதிர்பார்க்கல தேங்க்யூ .. தேங்க்யூ என்று சொன்னாள்.
பரவாயில்ல உங்க உழைப்புக்கு தான் இந்த ஊதியம் என்றான் ராஜா.
நான் இப்போ போற டப்பிங்ல இவ்வளவு தர மாட்டாங்க. நான் இதை எதிர்பார்க்கல. நீங்க சொன்னதும் எனக்கு எதுவும் வேண்டாம். அப்படின்னு தான் வந்தேன். ஆனா நான் எதிர்பார்க்காத அளவுக்கு மேல கொடுத்து விட்டீர்கள் என்று சசிகலா சொன்னாள். ராஜா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
நாட்கள் நகர்ந்தன. ஒவ்வொரு முறையும் இந்த நிகழ்வை ராஜாவிடம் சொல்லி சொல்லி ரொம்பவே பூரித்து நின்றாள் சசிகலா.
தான் நினைக்காத அளவிற்கு பணத்தை கொடுத்த ராஜாவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருப்பாள் போல
ஒருநாள் திடீரென ராஜாவுக்கு போன் செய்து அவளுடைய அலுவலகத்திற்கு வரச் சொன்னாள்.
அங்கே சென்றபோது ராஜாவிற்கு உணவும் கொடுத்து ஒரு தயாரிப்பாளைரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.
அவள் மனதில் அந்த சந்தோஷம் வழிந்தது. நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நாமமும் திரும்ப செய்ய வேண்டும் என்று நினைத்த அவளின் மனம் பாராட்டுக்குரியது.
ராஜா சசிகலாவின் அலுவலகம் சென்றான். அங்கு இருந்த தயாரிப்பாளரிடம் கதை சொன்னான். அவர்களுக்கு அந்தக் கதை பிடித்திருந்தது.
ராஜாவை விட சசிகலாவிற்கு ரொம்பவே சந்தோஷம். தனக்கு ஒரு உதவி செய்த ராஜா இன்னும் இன்னும் மேலே வரவேண்டும் என்று நினைத்தாள் சசிகலா ..
இதுதான் உலகம் ஒருவருக்கு நாம் நல்லது செய்தால் அவர்கள் திருப்பி நமக்கு நல்லதையே செய்வார்கள் என்பது நியதி.
ஆனால், நிறைய பேர் அதைச் செய்வதில்லை. அந்தக் குறும்படத்தை இயக்கிய ராஜாவிற்கு வந்த பணம் சொற்பம்தான் .
ஆனால் அதை அவன் எதிர்பார்க்கவில்லை.
நல்லதை மட்டும் செய்வோம் என்று அதை அவன் பெரிதுபடுத்தவில்லை
செய்நன்றி என்றும் உயர்ந்ததாக இருக்கும் என்பதை மட்டும் நம்பினான் ராஜா.
செய்நன்றிக்கு மிகச் சிறந்த உதாரணமாய் சசிகலா அவன் மனதில் பெரு உருவெடுத்து நின்றாள்.