சென்னை, பிப். 13–
சென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை தமிழகம் வருகிறார். நாளை காலை 10.30 மணிக்கு சென்னை வரும் அவர், ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, சென்னை, வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் , இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் போன்றவற்றை தொடங்கி வைக்கிறார்.
போக்குவரத்து மாற்றம்
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி நாளை காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை என்றும் மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கீழ்கண்டபடி திருப்பி விடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
அதேபோல், இராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம், எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.
மேலும் அண்ணாசாலையிலிருந்து இராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள், ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயர் பாலம், டவுட்டன் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.
அதேபோல், சவுத்கெனால் ரோட்டில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள், கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்று அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஏற்ப வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் சென்னை போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.