ஜெய்பூர், அக். 6–
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைலாஷ் சந்திர திரிவேதி கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் நுரையீரல் பிரச்சினையால் மரணமடைந்தார், இவருக்கு வயது 65.
இவர் நுரையீரல் பைப்ராசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயானது ரத்தத்திற்கு போதிய பிராணவாயு கிடைக்காமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும். இதன் காரணமாகத்தான் கைலாஷ் திரிவேதிக்கும் மரணம் அடைந்துள்ளார்.
சஹாரா தொகுதி எம்.எல்.ஏ.வான திரிவேதிக்கு, கடந்த 2ம் தேதி உடல்நிலை மோசமடைய ஜெய்ப்பூரிலிருந்து குர்கான் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.
கொரோனாவிலிருந்து மீண்டு விட்டாலும் அவருக்கு நுரையீரல் நோய் தீரவில்லை.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தன் இரங்கல் செய்தியில், ‘கைலாஷ் திரிவேதியின் மரணம் என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ஆதரவாளர்களுக்கு என் இதயப்பூர்வ இரங்கல்கள். இவர்கள் இந்தக் கடினமான காலக்கட்டத்தில் மனவலுவுடன் திகழட்டும்’ என்று கூறியுள்ளார்.