உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே ஜொலித்தது.
இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:–அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலானது பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. அதன் நீளம் 380 அடி (கிழக்கு–மேற்கு), உயரம் 161 அடி கொண்டதாகும். ராமர் கோயிலானது மூன்று அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம். இதில் மொத்தம் 392 தூண்களும், 44 கதவுகளும் உள்ளன. கோயிலின் பிரதான கருவறையில் பகவான் ஸ்ரீ ராமரின் குழந்தை பருவ சிலையும், முதல் தளத்தில் ஸ்ரீ ராம் தர்பாரும் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலில் நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிராத்தன மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என ஐந்து மண்டபங்கள் உள்ளன.
கோயிலின் பிரதான நுழைவாயில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 32 படிக்கட்டுகளை பயன்படுத்தி பக்தர்கள் கோயிலுக்குள் நுழையலாம்.கோயில் வளாகத்தின் 4 மூலைகளிலும் சூரிய பகவான், பகவதி தேவி, விநாயகர் மற்றும் சிவன் ஆகியோருக்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. வடக்குக் பகுதியில் அன்னபூரணியின் ஆலயமும், தெற்குப் புறத்தில் அனுமன் ஆலயமும் உள்ளன.
கோயில் வளாகத்தில், மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரா, மகரிஷி அகஸ்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷப்ரி ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
கோயிலை சுற்றிலும் 732 மீட்டர் நீளமும், 14 அடி அகலமும் கொண்ட செவ்வக வடிவ சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.
கோயிலுக்கு அருகே வரலாற்று சிறப்புமிக்க பழங்காலத்து கிணறு (சீதா கூப்) ஒன்று இருக்கிறது. கோயிலின் கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. பதிலாக பாரம்பரிய கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பிரதான கோயில் கட்டமைப்பில் ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட பன்சி பஹர்பூர் இளஞ்சிவப்பு மணற்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு அஸ்திவாரங்களில் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கோயிலின் அடித்தளம் 14 மீட்டர் தடிமனான ரோலர்–காம்பாக்ட் செய்யப்பட்ட காங்கிரீட் அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது. இது செயற்கை பாறையின் தோற்றத்தை அளிக்கிறது.
நிலத்தடி ஈரப்பதத்திலிருந்து கோயிலை பாதுகாப்பதற்காக, கிரானைட்டைப் பயன்படுத்தி 21 அடி உயர பீடம் கட்டப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், தீ பாதுகாப்புக்கான நீர் வழங்கல் மற்றும் ஒரு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி கொண்ட யாத்ரீகர்கள் வசதி மையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு, யாத்ரீகர்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் லாக்கர் வசதி இருக்கும். கோயில், முற்றிலும் பாரதத்தின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது.70 ஏக்கர் பரப்பளவில் 70 சதவீத பசுமையாக இருப்பதால், சுற்றுச்சூழல் நீர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து கட்டப்பட்டுள்ளது.
நாளை முதல்
பக்தர்கள் தரிசனம்
அயோத்தி பால ராமரை பக்தர்கள் நாளை முதல் (செவ்வாய்க்கிழமை) தரிசிக்கலாம். காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசிக்கலாம். காலை 6.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். இதில் கலந்து கொள்ள விரும்பும் மக்கள் https://srjbtkshetra.org/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். ஆனால் இதுவரை இந்த வசதி தொடங்கப்படவில்லை. இதே இணையதளத்தில் பொதுமக்கள் நன்கொடை அளிக்கலாம்.
ராமர் கோவில் கட்டுமானத்திற்காக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை பக்தர்கள் நன்கொடை தந்து உள்ளனர். இது சராசரியாக ஆண்டுக்கு ரூ.1666 கோடியாக இருக்கிறது.
பால ராமர் சிலையின்
சிறப்பு அம்சங்கள்
அயோத்தி ராமர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டுள்ள பால ராமர் சிலை பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது. தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் இருக்கும் அந்த சிலையின், வெளிப்பகுதியில் மாலை போல் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் விஷ்ணுவின் தசாவதார சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தர் அனுமன், கருடன் சிற்பங்களும் அதில் இடம் பெற்றுள்ளது.