செய்திகள்

தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள்: பட்டியலை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்

சென்னை, ஜன. 22–

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.14 கோடி பெண்கள், 3.03 கோடி ஆண்கள் ஆகும்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2024-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான வரைவுப் பட்டியல் கடந்த அக்டோபர் 27ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலை பொது மக்கள் பார்வையிடவும், அதில் திருத்தங்கள் செய்யவும், புதிதாக பட்டியலில் பெயர் சேர்க்கவும் கடந்த டிசம்பர் 9–ந்தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. அத்துடன், அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நவம்பரில் நான்கு சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 13,88,121 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 13,61,888 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெயர் நீக்கலுக்காக 6,43,307 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 6,02,737 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி (3,71,537), இறப்பு (1,33,477) மற்றும் இரட்டைப் பதிவு (97,723) ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. மேலும், 3,23,997 வாக்காளர்களின் பதிவுகளில் (ஆண்கள் 1,64,487; பெண்கள் 1,59,343; மூன்றாம் பாலினத்தவர் 167) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 330; பெண் வாக்காளர்கள் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,30,522 ; பெண்கள் 3,29,783 ; மூன்றாம் பாலினத்தவர் 114). இதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4 லட்சத்து 62 ஆயிரத்து 612 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,29,950 ; பெண்கள் 2,32,538; மூன்றாம் பாலினத்தவர் 124).

மாறாக, தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட -கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,72,140 ஆவர். (ஆண்கள் 84,702; பெண்கள் 87,435; மூன்றாம் பாலினத்தவர் 3). இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட -துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,72,624 ஆவர் (ஆண்கள் 89,569 ; பெண்கள் 82,996 ; மூன்றாம் பாலினத்தவர் 59).

இறுதி வாக்காளர் பட்டியலில் 3,480 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 4 லட்சத்து 32 ஆயிரத்து 805 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்போது பெயர் சேர்த்தலுக்காக பெறப்பட்ட மொத்தப் படிவங்களில், 18-–19 வயதுள்ள 5,26,205 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். (ஆண்கள் 2,74,035; பெண்கள் 2,52,096; மூன்றாம் பாலினத்தவர் 74).

வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை “1950″ என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் மாநிலத் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *