புதுடெல்லி, டிச.8-
மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் மத்திய அமைச்சர் மற்றும் எம்.பி.க்கள் சிலரை பாரதீய ஜனதா வேட்பாளர்களாக நிறுத்தியது. இதில் பலரும் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.
இதில் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், ரேணுகா சிங் சரூடா ஆகிய 3 மந்திரிகளின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி மாளிகை நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் சிலரின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா வேளாண் துறையை கூடுதலாக கவனிப்பார்.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை மந்திரியான ராஜீவ் சந்திரசேகர், ஜல்சக்தி துறை இணை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
வேளாண்துறை இணை அமைச்சர் சோபா கரண்டலே, உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார். சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவாருக்கு பழங்குடியினர் நலத்துறை இணை மந்திரி பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நியமனங்களையும் ஜனாதிபதி செய்திருப்பதாக அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.