செய்திகள்

தமிழகம் முழுவதும் சீரான வளர்ச்சியே எங்கள் லட்சியம்: ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜன.7–

தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்திருப்பதால் இங்கு அதிக தொழில் முதலீடுகள் வருகின்றன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் பரவலரான மற்றும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எனது லட்சியம் என்றும் முதலமைச்சர் கூறினார்.

தொழில் செய்ய அனைத்து உதவிகளையும் எங்கள் அரசு செய்யும்; உங்களுக்கு துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7–ந் தேதி) சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024”-யை தொடங்கி வைத்து பேசியதாவது:–

பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்லும்போதுதான் நான் சூட் போடுவது வழக்கம். ஆனால் இங்கு எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்ட காரணத்தால், இங்கே நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக உள்ளது. இன்று காலையிலிருந்து சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நான் இங்கு வந்தவுடன், முதலீடும் மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.

தொழில் துறையில் மேன்மையும், தனித்த தொழில்வளமும் கொண்ட மாநிலம்தான், தமிழ்நாடு.

9 நாடுகள்

இந்த நிகழ்வில், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்துள்ளன. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு, கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பது மூலமாக, மேலும், தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழிவகுத்துக் கொடுக்கும். முன்னணி முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், நிதி நிறுவனங்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற எல்லாருக்கும் இந்த மாநாடு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

1 டிரில்லியன் டாலர்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றவேண்டும் என்ற குறிக்கோளோடுதான், 2030–ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை, 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தவேண்டும் என்று ஒரு லட்சிய இலக்கை நான் நிர்ணயித்திருக்கிறேன். உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, மற்றும் வேலைவாய்ப்பு மிகுந்த முதலீடுகளை ஈர்ப்பது என்ற இருமுனை அணுகுமுறையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

ஒரு மாநிலத்தில், தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றால், அந்த மாநிலத்தின் ஆட்சி மேல் நல்லெண்ணம் இருக்கவேண்டும். அங்கு சட்டம் – ஒழுங்கு நல்ல முறையில் பேணப்பட்டு, அமைதியான சூழல் நிலவவேண்டும். ஆட்சியாளர்கள் மேல் உயர்மதிப்பு இருக்கவேண்டும். அந்த மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கவேண்டும். 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல், இந்த அம்சங்களெல்லாம் தமிழ்நாட்டில் இருப்பதால்தான், தொழில் துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது. முதலீட்டாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று முன்கூட்டியே கணித்து, இன்றைய தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

வணிகம் புரிதலை எளிதாக்கி வருகிறோம். திறன்மிகு பணியாளர்களை உருவாக்கி வருகிறோம். நாளைய தொழில் மாற்றங்களைக் கணித்து வைத்திருக்கிறோம். தொழிலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடையே இணைப்பினை ஏற்படுத்தி வருகிறோம். தொழிற்சாலைகளுக்கேற்ற தொழிலாளர்களை தயார்படுத்தி வருகிறோம். ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வருகிறோம். இளைஞர்களின் திறனுக்கேற்ற வேலைகளை உறுதி செய்து தருகிறோம். திறமையான இளைய சக்தியை உருவாக்கித் தருவதை நோக்கமாகக் கொண்டது, இன்றைய தமிழ்நாடு அரசு.

பெண்கள் முன்னேற்றத்துக்கு

அதிக முக்கியத்துவம்

பெண்களுக்கு பொருளாதார விடுதலை என்பது இந்த திராவிட மாடல் அரசின் முழக்கம். அதனால்தான், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” “புதுமைப் பெண் திட்டம்” “விடியல் பயணம்” “தோழி விடுதி” என்று அறிவித்து, பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

கடந்த இரண்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தில், பெருமளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதால், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்குகின்ற வகையில், 200-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை, தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை, தமிழ்நாடு தரவு மையக் கொள்கை, தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை,

தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை, தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை, தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை, செயற்கை மணல் (M-Sand) உற்பத்தியை ஒழுங்குப்படுத்துவதற்கான புதிய கொள்கை, தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை, தமிழ்நாடு எத்தனால் கொள்கை, தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை,

தமிழ்நாடு சரக்கு போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து திட்டம், தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல், மற்றும் செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்பு திட்டம், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை, தமிழ்நாடு சுற்றுலா கொள்கை, தென்னை நார் கொள்கை எனப் பல்வேறு கொள்கைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் வளர்ச்சி

தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் எங்களுடைய லட்சியம். அதனால்தான் தொழில் திட்டங்கள் எல்லாம் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு வருகிறது. பல பின்தங்கிய மாவட்டங்களில், பெரும் அளவில், வேலைவாய்ப்பு உருவாக்குகின்ற விதமாக முதலீட்டுத் திட்டங்கள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், அந்த மாவட்டங்களில் இருக்கின்ற இளைஞர்களுக்கும், மகளிர்களுக்கும் அவரவர்கள் வசிக்கின்ற மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுவது மட்டுமில்லாமல், அந்த மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.

முதலீட்டுக்கான

சிறந்த சூழல்

தமிழ்நாட்டில் ஏற்கனவே தங்களுடைய தொழில்திட்டங்களை அமைத்திருக்கிற பல நிறுவனங்கள், தங்களுடைய திட்டங்களை நன்றாக விரிவுபடுத்தியிருக்கிறார்கள் என்பது, தமிழ்நாட்டின் சிறப்பான தொழில் சூழலுக்கான அத்தாட்சி. மிகப்பெரும் தொழில் நிறுவனங்களான, ஹூண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன. 130-க்கும் மேற்பட்ட “பார்ச்சூன் 500” நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களுடைய திட்டங்களை நிறுவியிருப்பது, தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்திருப்பதற்கு இது ஒரு சான்று. முதலீடுகளை ஈர்க்கின்ற மாநிலங்களில், இந்திய அளவில் தமிழ்நாடு முன்னணி நிலை வகிக்கிறது! உலக அளவிலான முதலீட்டாளர்களை நன்கு வரவேற்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் மிகவும் திறமையானவர்கள். முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து சேவை ஆதரவுகளையும் தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் திறன்மிகு பணியாளர்களை இந்த மாநிலம் கொண்டுள்ளது. இந்த மாநாடு நடைபெறுகிற இரண்டு நாட்களிலும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மூலதனம் நிறைந்த மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, மின்சார வாகனங்கள், சோலார் பி.வி. செல்கள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளையும், ஜவுளி மற்றும் ஆடைகள், காலணிகள் மற்றும் தோல் பொருட்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற வேலைவாய்ப்பு நிறைந்த துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

உலகம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட முன்னணி வல்லுநர்களும், தலைமையாளர்களும் பங்கேற்கின்ற கருத்தரங்குகள், புத்தாக்கம் தொடர்பான நிகழ்ச்சிகள், இளம் தலைவர்கள் வணிகத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள், மகளிர் தலைமையாளர்களின் குழு விவாதங்கள் போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.

எட்டு துறைகள் சார்ந்த பெரிய தொழிற்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான அரங்குகள் மற்றும் தமிழ்நாடு சூழலமைப்பு அரங்கம் என்று பல்வேறு விதமான அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

20–-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், 500-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விற்பனையாளர்களுடன் கலந்துரையாடுவார்கள். உலகம் முழுவதும் இருக்கின்ற முதலீட்டாளர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களது முதலீடுகளை நாங்கள் கோரியுள்ளோம்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக, முதலீட்டாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறோம். அனைத்துத் துறைகளிலும், தமிழ்நாட்டை நாங்கள் முதன்மை பெறச் செய்யவேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்ல, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ வேண்டும் என்பதே எங்களது லட்சியம். இந்த முயற்சிகளுக்கு மகுடம் சூட்டிடும் வகையிலும், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டின் வலிமையை உலகிற்குத் தெரிய வைத்திடும்.

முதலீடு செய்யுங்கள்

இந்த மாநாட்டினால் தமிழ்நாட்டின் பொருளாதரம் வளரும். அதன்மூலம் இந்தியப் பொருளாதாரமும் உயரும். அன்புக்குரிய முதலீட்டாளர்களே, உலகத்தின் பல நாடுகளிலிருந்து, அமைதியில் சிறந்த, முதலீட்டாளர்களின் நண்பனாக திகழுகிற தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வந்து இருக்கிறீர்கள்.

துணை நிற்போம்

என் தலைமையிலான தமிழ்நாடு அரசு, உங்களுக்கு அனைத்து வகையிலும், உறுதுணையாக இருக்கும். உங்களுடைய உணர்வுகளை மதிக்கும். தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்யும். ஏனென்றால், இது, “சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!” என்ற ஆட்சி நடத்துகின்ற திராவிட மாடல் அரசு.

வாருங்கள்… முதலீடு செய்யுங்கள்… தமிழ்நாட்டின் முன்னேற்றத்திலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் உங்கள் பங்களிப்பை தாராளமாக வழங்குங்கள் என்று அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தொழில் துறை செயலாளர் அருண் ராய், வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, பல்வேறு அரசுத்துறையின் செயலாளர்கள், கோச்சி பெர்பெக்சூர் கவர்னர், தலைசிறந்த தொழில்முனைவோர்களான டிவிஎஸ் சேர்மன், ஜே.எஸ்.டபிள்யூ மானேஜிங் டைரக்டர், டாடா எலக்ட்ரானிக்ஸ் சி.இ.ஓ., ஹூண்டாய் மானேஜிங் டைரக்டர், அசோக் லேலண்ட் சேர்மன், கோத்ரேஜ் சேர்மன், கோல்ஹாம் பிரசிடெண்ட், பர்ஸ்ட் சோலார் சி.இ.ஓ.,

ஏபிபி மோலார் சிங்கப்பூர் மானேஜிங் டைரக்டர், வின்ஃபாஸ்ட் சி.இ.ஓ., ஓலா எலக்ட்ரானிக்ஸ் சி.இ.ஓ., மிட்சுபிசு மானேஜிங் டைரக்டர், ஃபெகட்ரான் சேர்மன், சிஐஐ தேசிய தலைவர் உள்ளிட்ட அயல்நாட்டுத் தூதரக அதிகாரிகள், பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், தொழில் துறையைச் சார்ந்த வல்லுநர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *