சென்னை, டிச.8-
புயல் மழையினால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த தேவைப்படும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
பள்ளி விடுமுறை முடிந்து வருகிற 11-ந்தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும், அந்த நேரத்தில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டிய, மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* தொடர் மழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் இருக்கலாம். எனவே சுற்றுச்சுவரில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
*பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் முழுவதும் ஆய்வு செய்து விஷ ஜந்துகள் இல்லாததை உறுதிசெய்ய வேண்டும். மின்கசிவு, மின்சுற்று கோளாறுகள் இருந்தால் அதனை ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேவையென்றால் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கலாம்.
* புயல் மழையினால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த, தேவைப்படும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை வழங்கிட தொடர்புடைய மாவட்டக்கல்வி அலுவலரை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.