மாநகர போக்குவரத்துக்கழகம் வாங்குகிறது
சென்னை, ஜன.13-
சென்னையில் 27 வழித்தடங்களில் இயக்குவதற்காக 100 ஏசி வசதியுடன் மின்சார பஸ்களை வாங்க அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதன்மூலம் தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனமே மின்சார பஸ்களை இயக்குவதோடு, பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளும். இந்த மின்சார பஸ் ஒன்றின் விலை ரூ.1.2 கோடியாகும். இந்த பஸ்சில் கண்காணிப்பு கேமரா, தானியங்கி முறையில் பயணிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையிலான கதவுகள், அகண்ட கண்ணாடி உடைய ஜன்னல்கள், தீ அணைக்கும் கருவி, முதல் உதவி பெட்டகம், 2+1 என்ற அடிப்படையில் 35 பேர் அமரும் வகையிலான இருக்கைகள், 35 பேர் நின்றவாறு பயணம் செய்யும் இடவசதி உள்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
சென்னை சென்டிரல் பல்லவன் சாலை, அடையாறு பணிமனையில் இருந்து இயக்கப்படும் சென்னை சென்டிரல்-– திருவான்மியூர், பாரிமுனை- – கோயம்பேடு, பாரிமுனை- – தாம்பரம், பாரிமுனை – -கே.கே.நகர், பாரிமுனை- – பூந்தமல்லி, அடையாறு- – தாம்பரம் (மேற்கு), திருவான்மியூர்- – பெரம்பூர், தியாகராயநகர்- – திருப்போரூர், திருவான்மியூர்- – தாம்பரம் உள்பட 27 வழித்தடங்களில் வருகிற ஆகஸ்டு மாதம் முதல் பயணத்தை தொடங்க உள்ளது.
மாநகர் போக்குவரத்துக்கழகம் வாங்க உள்ள மின்சார பஸ் 8 மணி நேரம் தொடர்ச்சியாக இயங்கும் ஆற்றல் கொண்டது. பின்னர் 30 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் போதும் மீண்டும் 8 மணி நேரம் இயங்கும் ஆற்றல் கொண்டது.