போபால், அக்.22-
மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் வறுமை ஒழியும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என சூளுரைத்தார்.
மத்தியபிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மத்தியபிரதேசத்துக்கு சென்றார். அங்கு குவாலியர் நகரில் சிந்தியா பள்ளியின் 125-வது நிறுவன தின விழாவில் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு முறையும் நான் குவாலியர் நகருக்கு வரும் போது மகிழ்ச்சி அடைகிறேன். நம் கலாசாரத்தை பாதுகாப்பதில் மாதவரராவ் சிந்தியா குடும்பம் நம் நாட்டிற்கு பெரும் பங்காற்றியுள்ளது. நம் இளைஞர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நம் பாரதம் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. எனது அரசு நாட்டின் இளைஞர்களுக்காக விண்வெளித் துறையையும் திறந்து வைத்துள்ளது.
பாரதத்தில் இருந்து வறுமையை ஒழிப்பது இன்றியமையாதது. அந்த நேசத்துக்குரிய இலக்கை அடையும் வரை நாங்கள் ஓயமாட்டோம். ஒரு கிராமத்தை தத்தெடுப்பது, தூய்மையில் கவனம் செலுத்துவது, உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பது, விவசாயிகளிடையே இயற்கை விவசாயத்தின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஏழைக் குடும்பத்தைத் தத்தெடுப்பது, தினைகளை உட்கொள்வது மற்றும் யோகா பயிற்சி செய்வது போன்றவற்றை மாணவர்கள் செய்ய வேண்டும்.
கற்றல், தொழில், அரசியல் அல்லது பொதுவாக வாழ்க்கையின் துறையாக இருந்தாலும் சரி; குறுக்குவழிகள் உடனடி ஆதாயத்தை அளிக்கலாம், ஆனால் நீண்ட கால சிந்தனையுடன் ஒருவர் உழைக்க வேண்டும். சமூகத்திலோ அல்லது அரசியல் அரங்கிலோ, குறுகிய கால நன்மைகள் ஒரு தனிநபரை வளப்படுத்தலாம் ஆனால் அதன் விளைவாக சமூகம் பாதிக்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.