சென்னை, பிப். 21–
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளதாவது:–
ஓர் இனம் தாய்மொழி
‘இன்று உலகத் தாய்மொழித் திருநாள். வாழ்த்து அச்சம் இரண்டையும் பகிர்ந்து கொள்கிறேன். தாய் என்ற அடைமொழிகொண்ட சொற்களெல்லாம் உயர்ந்தவை; உலகத் தன்மையானவை மற்றும் உயிரோடும் உடலோடும் கலந்தவை. தாய்நாடு, தாய்ப்பால், தாய்மொழி இவை எடுத்துக்காட்டுகள். ஆனால், உலகமயம் தொழில்நுட்பம் என்ற பசி கொண்ட பற்கள் இரண்டும், தாய்மொழியின் தசைகளைத் தின்னுகின்றன.
உலக தேசிய இனங்கள் விழிப்போடிருக்க வேண்டிய வேளை இது. அரசு, ஆசிரியர், பெற்றோர், மாணவர், ஊடகம் என்ற ஐம்பெரும் கூட்டணிகளால் மட்டுமே இந்தப் பன்னாட்டுப் படையெடுப்பைத் தடுக்க முடியும். சரித்திரத்தின் பூகோளத்தின் ஆதிவேர் காக்க, ஓர் இனம் தாய்மொழி பேண வேண்டும். எங்கள் தாய்மொழி எங்கள் அடையாளம் மற்றும் அதிகாரம். இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.