சென்னை, ஜன. 13–
புழல் ரசாயன கிடங்கில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ 10 மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சென்னை, புழல் – அம்பத்தூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக், ரப்பர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் மூலப்பொருட்கள் அடங்கிய ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் உள்ளே வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்கள், உடை, வாகன டயர்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின. இந்த விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அம்பத்தூர், வியாசர்பாடி, செங்குன்றம், ஆவடி, பெரம்பூர், செம்பியம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பொருட்கள் எல்லாமே எளிதில் தீப்பற்றக்கூடியவை என்பதுடன், வீர்யம் மிக்க பொருட்கள் என்பதால், தீயை அணைக்கும் பணி மிகவும் சவாலாக இருந்தது.
நள்ளிரவு 12 மணி முதல் இன்று காலை 10 மணி வரை வரை தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சியால் சுமார் 10 மணி நேர போராடத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.. மேலும், குடோனிலிருந்த தொழிலாளிகளையும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.
தீ விபத்தில் குடோனில் பல கோடி மதிப்புள்ள இறக்குமதி பொருட்கள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகிறார்கள். தடயவியல் நிபுணர்கள் தீ விபத்து நடந்த இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.