செய்திகள்

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்: இஸ்ரேல் பிரதமர் உறுதி

காசாவில் இருந்து பொதுமக்கள் வெளி்யேற கெடு

டெல்அவிவ், அக்.14–

“காசா தாக்குதல் வெறும் ஆரம்பம்தான் இனி நடப்பதை என்னால் கூட கணித்துச் சொல்ல முடியாது” நாங்கள் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் இன்று 8-வது நாளை எட்டியுள்ள நிலையில் இருதரப்பிலும் சேர்த்து 3000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு காசாவில் இருந்து மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேறும்படி இஸ்ரேல் நேற்று கெடு விதித்தது. இதன் மூலம் காசா முனை மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராவதாக தகவல் வெளியானது. இஸ்ரேலின் எச்சரிக்கையையடுத்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் துடிக்கும் அப்பாவிப் பொதுமக்களை ஹமாஸ் தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். கடைசி சொட்டு ரத்தம் சிந்தப்படும் வரை போர் தொடரும் என்று கூறி மக்களை வெளியேற வேண்டாம் எனக் கோரி வருகின்றனர். அதையும் மீறி மக்கள் தெற்கு நோக்கி முன்னேறி வருகின்றனர்.

பொதுமக்கள் எதிரியல்ல

வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனர்களை தடுக்க ஹமாஸ் முயற்சிப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. எங்கள் நோக்கங்களை முன்கூட்டியே தெரிவித்துவிட்டோம், ஏனென்றால் போரால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. பொதுமக்கள் எங்கள் எதிரியல்ல. பொதுமக்களை கொல்லவோ, காயப்படுத்தவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. நாங்கள் ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக சண்டையிடுகிறோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக 120 இஸ்ரேலியர்களை பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சிக்கியிருந்த 250 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை இஸ்ரேல் கடற்படை வீரர்கள் நேற்று மீட்டனர். அப்போது 60 ஹமாஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மேலும் 120 இஸ்ரேலியர்கள் சிக்கியுள்ளதாகவும் அவர்களும் மீட்கப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் சிலரின் உடல் காசா முனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. காசாவுக்குள் புகுந்து இஸ்ரேல் நடத்திய சோதனையில் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சோதனையில் எத்தனை உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

6 மணி நேரம் கெடு

காசாவுக்குள் முதல் முறையாக இஸ்ரேல் தரைப்படை நேற்று நுழைந்தது. இந்நிலையில், காசாவில் இருந்து வெளியேற பாலஸ்தீனியர்களுக்கு கூடுதலாக 6 மணி நேரம் காலக்கெடு விதித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாலஸ்தீனியர்கள் வடக்கே பெய்ட் ஹனூனில் இருந்து தெற்கே கான் யூனுனிஸ் வரை செல்லலாம். உங்கள் மீதும் உங்கள் அன்புக்கு உரியவர்கள் மீதும் அக்கறை இருந்தால் தெற்கே செல்லுங்கள். பாதுகாப்பான பாதையில் பாலஸ்தீனியர்கள் பயணிக்கலாம். அங்கு தாக்குதல் நடத்தப்படாது என தெரிவித்துள்ளது.

பிரதமர் எச்சரிக்கை

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், “ஹமாஸ் தாக்குதலில் 1300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதற்கு முதல் அடிதான் காசா மீதான தாக்குதல். இதுதொடக்கம் தான் இன்னும் தரைவழித் தாக்குதல் இருக்கிறது. காசா எல்லையை நோக்கி ஆயிரக்கணக்கான வீரர்கள் விரைந்துள்ளனர். இனி என்ன நடக்கும் என்று என்னால்கூட சொல்ல முடியாது. ஆனால் இதுதான் தொடக்கம் என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன்.

இந்தப் போரை இதுவரை இல்லாத அளவு வலிமையாக முடிப்போம். நாங்கள் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிப்போம். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பரந்த சர்வதேச ஆதரவு உள்ளது.

நமது எதிரிகள் இப்போதுதான் விலை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். என்ன நடக்கும் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியாது.

நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். யூத மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடூரங்களை ஒருபோதும் மறக்க மாட்டோம். வரம்பற்ற சக்தியைக் கொண்டு எங்கள் எதிரிகளை எதிர்த்து போராடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறுகையில்

இந்த தாக்குதலில் 27 அமெரிக்கர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். ஆரம்பம் முதலே நான் கூறியது போல், அமெரிக்கா தவறு செய்யாது. இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்போம் என்றார்.

மோதலில் தாய்லாந்தை சேர்ந்த 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தாய்லாந்து பிரதமர் ஸ்ரீத்தா தாவிசன் உறுதி செய்துள்ளார்.

காசா நகரம் 41 கிமீ நீளமும் ஆறு முதல் 12 கிமீ அகலமும் கொண்டது. வடக்கு காசா, காசா, மத்திய பகுதி, கான் யூனிஸ் மற்றும் ரபா என ஐந்து பகுதிகளாக காசா முனை பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு நில வழியாக மொத்தம் இரண்டு எல்லைகள் உள்ளன. அதன் வடக்கு மற்றும் கிழக்கில் எல்லையாக இஸ்ரேலும், தெற்கில் எகிப்தும் எல்லையாக உள்ளன. இந்த இரண்டுமே தற்போது மூடப்பட்டுவிட்டன. காசாவின் மேற்கில் மத்திய தரைக் கடல் உள்ளது. மேற்கு கடற்கடரை என அழைக்கப்படும் இதுவும் மூடப்பட்டுவிட்டது.

கடல் எல்லை இப்படியென்றால், காசாவின் வான்வெளியோ ஏற்கனவே இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. காசா விமான நிலையமும் 2002-ல் இஸ்ரேலியர்களால் அழிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, உலகத்திலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட பகுதியே காசா முனை. 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட குறுகிய நிலப்பரப்பு கொண்ட காசாவில், மிகவும் அடர்த்தியாக மக்கள் வசிக்கிறார்கள். உணவு, எரிபொருள், மருந்துகள், குடிநீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு கிட்டத்தட்ட இஸ்ரேலையே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *