சென்னை, பிப். 11–
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 10.30 மணி முதல் பகல் 3.30 மணி வரை செல்லும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே ரயில்வே தண்டவாளம் மற்றும் ரயில்வே கட்டமைப்புகள் பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 10.30 மணி முதல் பகல் 4.30 மணி வரை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.,
இதேபோல் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் பகல் 1 மணி ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. இது மட்டுமின்றி சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்களும் இன்று குறிப்பிட்ட நேரமான 10.30 மணி முதல் 3.30 மணி வரை இயக்கப்படவில்லை.
வார இறுதி நாட்களில் வழக்கமாக புறநகர் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட சற்று குறைவாகவே இருக்கும். எனினும் இந்த வழித்தடத்தில் ரயில்கள் பராமரிப்புப் பணிகள் நடப்பதால் புறநகர் ரயில் சேவைகள் இன்று ஒரு நாள் மட்டும் 5 மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் ரயில்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதுதவிர, காஞ்சிபுரம்– சென்னை கடற்கரைக்கு இன்று காலை 9:30 மணிக்கு இயக்கப்பட இருந்த ரயில், திருமால்பூர்-சென்னை கடற்கரை வரையிலான பயணிகள் ரயிலும் குறிப்பிட்ட நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகளுக்காக ரயில் சேவைகள் இல்லாததால், தாம்பரம், செங்கல்பட்டு வழியாக செல்லும் ஜிஎஸ்டி சாலையில் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.