சென்னை, டிச.22–
முதலமைச்சரின் உத்தரப்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், நேற்று (21–ந் தேதி), கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த பணிமனைகளை, நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் சிவசங்கர் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குரத்துக் கழக நகர், புறநகர் கிளைகள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தூத்துக்குடி பணிமனையையும் நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பணிமனைகளில் உள்ள பேருந்துகளை சரிசெய்து முழுமையாக பேருந்துகளை இயக்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், தூத்துக்குடி நகரக் கிளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தஞ்சம் அடைந்துள்ள ஆதரவற்ற வயதான மாற்றுத்திறனாளிகள் சுமார் 30 நபர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடைகளை வழங்குமாறும், பேருந்துகளில் நிவாரணப் பொருட்களை கட்டணமில்லாமல் ஏற்றி சென்றிடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி வட்டாரப் போக்குவர்த்து அலுவலகத்தை பார்வையிட்டு, மீண்டும் முழு அளவில் பணிகளை செய்வதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது, திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.எஸ். மகேந்திர குமார் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.