ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தகவல்
டெல் அவிவ், அக். 18–
காசா நகரில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையைில், ராக்கெட் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் எனவும், தாக்குதலை நடத்திவிட்டு ஹமாஸ் மீது இஸ்ரேல் அதிபர் பழி சுமத்துவதாக ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தி வரும் வான்வழித் தாக்குதல் மூலம், 2,778 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டும், 9,700 பேர் காயமடைந்தும் உள்ளனர். காசாவை முழுவதுமாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், வடக்கு காசாவில் உள்ள மக்கள் தெற்கு காசாவுக்கு வெளியேற வேண்டும் என்று எச்சரித்தது. இதனால் சுமார் 10 லட்சம் பேர் வெளியேறி தெற்கு காசாவுக்கு நடைப்பயணமாகச் சென்று தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு காசாவின் ராஃபா, கான் யூனிஸ், மத்திய காசா பகுதிகளிலும் இஸ்ரேல் நேற்று குண்டுகளை வீசி தொடர் தாக்குதல் நடத்தியது. இதில் காசா சிட்டியில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் மருத்துவ உதவிகளுக்காக தஞ்சம் அடைந்திருந்த பாலஸ்தீனர்கள் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சர் தெரிவித்தார். மருத்துவமனையில் அப்பாவி மக்கள், நோயாளிகள் கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேல்தான் காரணம்
இந்த சூழலில், காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஹமாஸ் நடத்திய தாக்குதல் எனவும், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றதற்கான காரணம் குறித்து தனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்ம் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காசா நகரில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நேற்று இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் எனவும், தாக்குதலை நடத்திவிட்டு ஹமாஸ் மீது இஸ்ரேல் அதிபர் பழி சுமத்துவதாக ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தெரிவித்துள்ளார்.
காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மருத்துவமனை மீதான தாக்குதலில் ஏராளமானோர் பலியான நிலையில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.