தமிழ்நாட்டில் 15 பேருக்கு தொற்று
டெல்லி, டிச. 22–
இந்தியாவில் புதிதாக 640 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2997 ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 594 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,07,158 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 21 ந்தேதி வெறுமனே 13 பேருக்கு மட்டுமே இந்தியாவில் கொரோனா கண்டறியப்பட்டது. அதேபோல், இந்தியா முழுவதும் சிகிச்சையில் இருந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 160–180 என்ற அளவிலேயே இருந்து வந்தது. ஆனால், 30 நாட்களில் கிடுகிடுவென உயர்ந்து நாளொன்றுக்கு 600 பேர் என்ற அளவில் தொற்று பரவி வருகிறது என்பதுடன், மொத்த எண்ணிக்கை 3000 என்ற அளவை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கையில் கேரளாவில் மட்டும் நேற்று 265 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் சிகிச்சையில் உள்ளோர் 2600 என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2997 ஆக உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 104 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,33,328 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் வீடு திரும்பிய நிலையில், இதுவரை மொத்தம் 4,44,70,887 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.68 கோடி டோஸ் தடுப்பூசிக் செலுத்தப்பட்டுள்ளன என்று இந்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.