டெல்லி, அக். 6–
ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோதல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்குப் பதிவை அமைதியாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவதற்கான திட்டங்களை இறுதி செய்ய தேர்தல் பார்வையாளர்களுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
மிசோரம் மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 17-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெவ்வேறு தேதிகளில் முடிவுக்கு வருகின்றன. இதன் காரணமாக இந்த மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பா் அல்லது டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
ஓரிரு நாளில் தேதி அறிவிப்பு
5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை ஓரிரு நாள்களில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளையும் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் தேர்தல் தயார் நிலை குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்த தேர்தல் ஆணையக் குழு, தனது பணியை நேற்று நிறைவு செய்தது. அதுபோல, மற்ற மாநிலங்களில் தயார் நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், 5 மாநில தேர்தல் பார்வையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை டெல்லியில் தேர்தல் ஆணையம் இன்று கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பொது மற்றும் செலவினப் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.