ஜம்மு, ஏப். 29–
காஷ்மீர் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் இருந்து கந்தர்பால் மாவட்டத்தின் காங்கன் பகுதியை நோக்கி வாடகை கார் ஒன்றில் 9 பேர் சென்றனர்.
அவர்கள் பயணம் செய்த கார் ககன்கீர் பகுதியில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிந்து ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் பிற மீட்பு படையினருடன் சேர்ந்து, போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 2 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காரில் பயணம் செய்த 9 பேரில் மற்ற 3 பேரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. காணாமல் போன அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விபத்து நடந்தபோது, காரில் இருந்து கீழே குதித்து தப்பிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த பயணிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.